கோடை வெயில் டு குளு குளு மழை!
கோடைக் காலம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில்தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழையால் தமிழகத்தின் வெப்பம் சற்று குறைந்திருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை மழை
இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் வரும் 19-ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும், அதிகபட்சமாக 20 செ.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் 21 செ.மீ-க்கு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.
ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று 16.05.2024 தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 19-ம் தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அதோடு, நாளை (17.05.2024) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நீலகிரி ஆகிய 26 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
கோடை மழை.!
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், “கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் அதி கனமழை பெய்யும்” என்று சொல்லி ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. மேலும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலம் முழுவதும் இயல்பு வெப்பநிலையை விட ஐந்து செல்ஸியஸ் குறைவான வெப்பநிலையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
