தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. அதை மனதில் வைத்துதான் 1996 இல் நான் நினைத்திருந்தால் முதலமைச்சரே ஆகியிருப்பேன் என ரஜினியே பேசியிருந்தார். ஆனால், தமிழக அரசியலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடாத சம்பவங்களும் இருக்கவே செய்கிறது.

1991-96 ஜெயலலிதா ஆட்சி நிறைய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட ஆட்சி. அந்த சமயத்தில் ரஜினிக்கும் ஜெ-க்குமே முட்டல் மோதலாகவே இருந்தது. நிறைய மேடைகளில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் ரஜினி பேசினார். போயஸ்கார்டனுக்குள் ரஜினியின் காரை நுழையவிடாமல் ஜெவின் பாதுகாவலர்கள் தடுக்க ரஜினி காரிலிருந்து இறங்கி தெருவில் நடந்து பரபரப்பை கிளப்பியதாகவும் கதைகள் உண்டு. பாட்ஷா பட மேடையில் ‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது’ எனப் பேசி அதிமுக ஆட்சியை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்துதான் 1996 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் தமாகாவும் அமைத்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்றார். தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தது. கருணாநிதி முதல்வரானார். மூப்பனாரின் தமாகாவுக்கு பெரு வெற்றி.
அதிமுக வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதிலிருந்துதான் ரஜினி வாய்ஸூக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கம் இருக்கும் என்கிற பேச்சு எழுந்தது.

ஆனால், 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக – தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக தமாகா கூட்டணி 9 இடங்களிலும் மட்டுமே வென்றது. ரஜினி வாய்ஸ் இங்கே எடுபடவில்லை.
அதேமாதிரி, பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பாமகவுக்கும் முட்டிக் கொண்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருந்தது.
ஆக, ரஜினி வாய்ஸ் எடுபடாமல் போன சம்பவங்களும் இங்கே இருக்கிறது. மேடையில் சிலர் அந்த சம்பவங்களை வசதியாக மறந்துவிடுவர்.
(தொடரும்)
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
